அனைத்தையும் நாடி  இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

இலங்கையில் பயங்கரமான இருண்ட வரலாற்றுப் பின்னணியுள்ள கட்டிடங்கள்

2021 Jun 11

இலங்கையின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாட்டில் பல பாரம்பரிய மற்றும் பழமைவாயந்த கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், இவ்வாறான கட்டிடங்கள் நாட்டின் அடையாளமாகவும், ஒவ்வொரு கட்டிடத்திற்கு பின்னால் ஒரு இருண்ட கடந்த கால வரலாறும் மறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். 

The Tintagel Boutique Hotel

Tintagel Boutique Hotel ற்கு Boutique என்ற அடைமொழி பெற அதன் அழகிய கட்டிட வடிவமைப்பே காரணம். இக் கட்டிடமானது இலங்கையில் முன்னாள் பிரதமர்  S. W. R. D.பண்டாரநாயக்க அவர்களது பிரத்தியேக வாசஸ்தலமாக இருந்தது. அதேவேளையில் இந்த கட்டிடத்தின் அழகினை மறக்கடிக்க வல்ல ஒரு இருண்ட கடந்த கால வரலாறு ஒன்றும் உள்ளது. ஆம்,  S. W. R. D.பண்டாரநாயக்க அவர்கள் இந்த இடத்தில்தான், தல்துவே சோமராம தேரரினால் படுகொலை செய்யப்பட்டார். 1959 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி இக் கட்டிடத்தின் வராண்டாவில் அமர்ந்து நாட்டின்  நலனுக்காக வேண்டி மக்களை நேரில் சந்தித்து மக்களின் பிரச்சனையை  கேட்டுக் கொண்டிருந்த தருணத்தின்போது அங்கு வந்த தேரர், மறைக்கப்பட்டிருந்த தனது துப்பாக்கியை கொண்டு பிரதமரது மார்பு மற்றும் அடி  வயிற்றுப்பகுதியில் நான்கு முறைகள் சுட்டார். இந்த நான்கு தோட்டாக்களும் பிரதமரின் உடலை துளைக்கும் தருணங்களில் பாதுகாப்பு கான்ஸ்டபிலினால்  தேரரை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி தோட்டா, தேரரின் இடுப்பு பகுதியை துளைத்தது. பின்பு தேரர் கைது செய்யப்பட்டார். அதேவேளையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர்  S. W. R. D.பண்டாரநாயக்க, சிகிச்சை பலனின்றி மறுநாள் இறைவனடி சேர்ந்தார். 

No. 7, St. Alban’s Place Bambalapitiya

Albans Villa என்று வர்ணிக்கப்படும், No. 7, St. Alban’s Place Bambalapitiya என்ற முகவரியில் அமையப் பெற்றிருக்கும் இரண்டு மாடி கட்டிடமானது விருந்தினர் இல்லமா அல்லது ஒருவரின் வாசஸ்தலமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் உள்ளது. எனினும், 1949 ல் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரரது இல்லமாக இது கருதப்படுகிறது. இந்த வீட்டில் முன்னாள் கிரிக்கட் வீரர் சதாசிவம், அவரது மனைவி பரிபூரணம் ஆனந்தா, மற்றும் அவரது நான்கு மகள்கள் என குடும்பமாக வசித்து வந்தனர், இவ்வாறிருக்க, October மாதம் 9 ஆம் திகதி 1951ஆம் ஆண்டு திருமதி சதாசிவம் அவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு வீட்டின் சமையலறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதன் காரணமாக திரு.சதாசிவம் மற்றும் அவ் விட்டின் சமையல் வேலையில்  பணிபுரிபவர் என இருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.  எவ்வாறாயினும் சாட்சிகளின் அடிப்படையில் சதாசிவம் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டு, சமையற்காரர்மேல்  குற்றமானது நிரூபிக்கப்பட்டது.

The General’s House, Nuwara Eliya

இலங்கையின் பாராளமன்ற உறுப்பினர்களுக்காக வாடகைக்கு விடப்படும் பழமை வாய்ந்த மிகவும் அழகிய பங்களாவாக The General’s House திகழ்கின்றது. எனினும் இந்த பங்களாவில் அறை இல 16 ல் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் பதிவில் எழுதப்பட்டாலும் அதன் பின்னணியிலிருக்கும் உண்மைத் தன்மை எவராலும் சரியாக கூற முடியவில்லை. இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று   சந்தேகிக்கப்படுகிறது. ஆம், 2016ல் பாரளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இங்கு தங்கி இருந்த போது அதிகாலை இரண்டு மணியளவில் குளியலறைக்கு செல்லும் போது ஏதோவொரு அமானுஷ்ய சக்தியை உணர்ந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னர் பாராளமன்ற உறுப்பினர்கள் யாரும் இங்கு தங்கும் எண்ணத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stellenberg Estate, Nuwara Eliya

1940ல் இலங்கை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் Stellenberg Estate ல் மிகக் கடுமையான முகாமையாளராக திரு.ஜோர்ஜ் போப் இருந்தார். பல நேரங்களில் போப் இற்கும் சங்கத் தலைவரான மெய்யப்பனுக்கும் சரியாக ஒத்து போகவில்லை. இதன் கரணமாக மெய்யப்பன் போப் இனால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் பின்பு சங்கத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக மெய்யப்பன் மீளவும் பணியில் அமர்த்தப்பட்டார். இதற்காகவேண்டி Stellenberg Estate, பங்களாவில் 1941 மே மாதம் ஒரு நள்ளிரவில் மெய்யப்பன் மற்றும் ஐந்து பேர் இணைந்து, போப் அவர்களை கடுமையாக தாக்கி படுகொலை செய்தனர். பின்னர் மெய்யப்பன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவின் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு, அனைவருக்கும் 1942 ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Independence Square Arcade

1889ல் காலனித்துவ ஆட்சிகாலங்களின் போது மனநலம் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கான வைத்தியசாலையாக இக் கட்டிடம் திகழ்ந்து வந்தது. எனினும் பிற்காலங்களில் அதிகளவிலான நோயாளர்கள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை காரணமாக இவ் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் யாவும் அங்கொட இற்கு மாற்றப்பட்டது. பின்பு இந்த கட்டிடம் எந்த வித தேவைக்கும் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. எனினும் சில ஆண்டுகளுக்கு முன்பு மீள்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்று கொழும்பின் முக்கிய உல்லாசத் தளமாக இது திகழ்கின்றது.

The Duff House, Bagatalle Road

1933 ஆம் ஆண்டு, லில்லியன் ரோஸ்லின், அவரது கணவர் செனவவிரத்னவினால் க்ளோரோஃபோர்ம் கொண்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் இந்த பங்களாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆம், திருமதி செனவிரத்ன அவர்கள், தனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் சந்தர்பங்களை தாமாகவே உருவாக்கியதால் இந்த கொலை வழக்கு சந்தேகத்துக்குரிய ஒரு வழக்காக கருதப்படுகிறது. எனினும் திரு.செனவிரத்ன, தான் பணிப் பெண்ணுடன் கொண்டிருந்த தாகாத உறவு மனைவிக்கு தெரிந்ததால் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு அல்லது மூன்று முறை மனைவியை கொலை செய்ய முயற்ச்சித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்டு முப்பது மாத காலம் சிறையில் இருந்த செனவிரத்ன, மேல் முறையீட்டின் மூலமாக பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

The St. Paul’s Church Colombo Vicarage

பாதிரியார் மெதிவ் அவர்கள் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு காரணமாக St. Paul’s தேவாலயத்தின் பாதிரியாரின் இல்லம் பரவலாக அனைவராலும் அறியப்படுகிறது. 

1978 மாரச் மாதம் 19 ஆம் திகதி பாதிரியார் மெதிவ் பீரிசின் மனைவி Eunice, பாதிரியாரின் செயலாளரின் கணவரின் மூலமாக இன்சுலின் ஏற்றி ‘கோமா’ நிலையை அடையச் செய்து, கொலை செய்யப்பட்டார். பாதிரியார் மெதிவ் மற்றும் செயலாளர் Dairene குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு, பின்னர் Dairene விடுவிக்கப்பட்டார்.

Capri Club Colombo 

1967 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி, Capri Club ல் துப்பாக்கிச்சூட்டு சத்தம் ஒன்று கேட்டது. இந்த இல்லமானது பர்மாவின் இலங்கைக்கான தூதர் Boonawaat மற்றும் அவரது மனைவி அம்மையார் Shirley Boonwaat உடையது. தூதரது இல்லத்தில் கேட்ட துப்பாக்கி சத்தத்தை கேட்ட அயலவர்கள் விரைந்த போது, பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் காரில் தப்பிகக முற்பட்டு, பின்னர் மீண்டும் இல்லத்திற்குள் இழுத்துச் செல்லப்படும் காட்சியை கண்டனர்.

பின்னர் தூதரினால் பிரேத பரசோதனைக்கு அனுமதி வழங்கப்படாததால், அவசர அவசரமாக மரண சான்று வழங்கப்பட்டு, அதே நாள் மதியம் 1:30க்கு பிரேதம் தகனமும் செய்யப்பட்டது

அதனைத் தொடர்ந்து வாசஸ்தலத்தின் வாயிற் கதவுகள் மூடப்பட்டன. பின்னர் தூதர் சிறிது நாட்கள் கழித்து ரங்கூன் இற்கு சென்றார். சட்ட ரீதியாக எவரும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இந்த கொலை தொடர்பாக எந்தவொரு விசாரணையும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் திருமதி Shirley Boonwaat ஒரு இசைக் கலைஞருடன் கொண்டிருந்த தகாத உறவின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற வதந்தி அக் காலத்தில் பரவலாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php