2021 Nov 2
இந்து மதத்தின் பழமையான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதாவது வாழ்வில் இருளை நீக்கி ஒளிப்பிரகாசத்தை கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகை இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு இலங்கை, நேபாளம், லண்டன் என தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளிலும வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிக் கொண்டாடப்படுவதற்கான நோக்கமாக பல காரணங்களை புராணக்கதைகள் கூறுகின்றன. அதில் சிலவற்றை பார்ப்போம்.
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த அந் நாளை மக்கள் கொண்டாடிய நாளாகவும், இராமயணத்தில் இராமபிரான் இராவணனை அழித்துவிட்டு அயோத்திக்கு வரும்போது அங்கிருந்த மக்கள் தீபமேற்றி வரவேற்ற நாளாகவும், கந்த புராணத்தில் சிவபெருமான் சக்தியை தன் அங்கத்தில் பாதியாய் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவெடுத்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்ற பல இதிகாச கதைகள் உள்ளன.
அதிகாலையில் துயில் விட்டெழுந்து, எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடைகள் அணிந்து ஆலயவழிபாடு செய்து இனிப்புகளையும் பலகாரங்களையும் அயல்வீட்டாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர் மக்கள். இதில் முக்கியமாக வீட்டு முற்றங்களில் தீபங்களை வரிசையாக ஏற்றி தீபாவளியை கொண்டாடும் நிகழ்வும் இடம்பெறும். புதிதாகத் திருமணமாகிய தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளி, தலைதீபாவளி என்று அழைக்கப்படுகிறது.
மக்கள் மனதிலுள்ள தீயவை எல்லாம் அகன்று, நன்மை விளைந்து உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ பிரார்த்தித்து இவ் வருட தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.
அனைவருக்கும் நாடியின் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்..!