2023 Apr 6
அடிக்கிற வெயில் மண்டைய மட்டுமா பிளக்குது? நாக்கு வறண்டு உடம்பெல்லாம் தகதகன்னு கொதிக்கிறமாதிரி இருக்கிறப்போ ஜில்லுனு பிரிட்ஜில இருந்து இரசாயனம் கலந்த கூல் ரிங்க எடுத்து குடிச்சா ஆரோக்கியமா இருக்குமா என்ன? அதுக்கு பதிலா ஆரோக்கியமா ஏதாவது குடிச்சா? வாங்க இந்த கோடை காலத்திற்கு ஏற்ற மாதிரி சில ஜூஸ் வகைகளை எப்படி தயாரிக்கிறதுன்னு இன்னிக்கு பார்க்கலாம்…
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி என்பது இந்த கோடை காலத்தில் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஓன்று. அதிகமான நீர் சத்தினையும் நார் சத்தினையும் மினரல்களையும் கொண்ட தர்பூசணியுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து ஜூஸ் தயாரிக்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பொலிவிற்கும் மிகுந்த பலனளிக்கக்கூடியதாக இருக்கும். விதைகளை அகற்றிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் தர்பூசணியினை, தேவையான அளவு சீனி, எலுமிச்சை சாறு, சிறிய துண்டு இஞ்சி, உப்பு சிறிதளவு இட்டு நன்கு மிக்சியில் அடித்து வடித்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் டம்ளரில் ஐஸ் கட்டிகளுடன் ஏற்கனவே ஊரவித்திருக்கும் கசகசாவினை (கசகசா உடலுக்கு நல்ல குளிர்ச்சியினை கொடுக்கக்கூடியது) இட்டு அதற்குமேல் வடிகட்டி வைத்திருக்கும் ஜூஸினை ஊற்றி அருந்திப்பாருங்கள் சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்தே உங்களை ஈர்த்தெடுக்கும்.
கறிவேப்பிலை ஜூஸ்
தலை மயிர் உதிர்வு, ஹீமோகுளோபின் குறைபாடு போன்றவற்றுக்கு மிகச் சிறந்த எளிய தீர்வுதான் இந்த கறிவேப்பிலை ஜூஸ். கழுவி சுத்தப்படுத்திய கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் கலந்து கறிவேப்பிலை நன்கு மசிந்து அறையும்வரையில் அரைத்துக்கொள்ளவேண்டும் . பின்பு தேவையான அளவிற்க்கு இன்னும் நீரூற்றி வடித்தெடுத்து இனிப்புச் சுவை சேர்க்காமல் அருந்துவதென்பது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கக்கூடியது . உடல் எடையினை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸினை அருந்துவது நல்லது.
நெல்லிக்காய் ஜூஸ் (ஆம்லா ஜூஸ் )
நம்முடைய சருமத்திற்கும் தலை முடிக்கும் மிகுந்த ஊட்டதினை அளிக்கக்கூடிய மருத்துவ பயன்மிக்கதொரு ஜூஸ் வகைதான் இந்த பெரிய நெல்லிக்காய் ஜூஸ். விதைகளை நீக்கி பொடியாக நறுக்கிவைத்திருக்கும் பெரிய நெல்லிக்காய் துண்டுகளுடன், கொஞ்சம் கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து மிகக்சியில் நன்கு அரைத்தெடுத்து வடிகட்டியபின் ஐஸ் கட்டிகள் கலந்து அப்படியே குடிக்கலாம் அப்போதுதான் அதன் மருத்துவ பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் கொஞ்சம் இனிப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். (வெள்ளை நிற சீனியை இந்த ஜூஸிற்கு முழுமையாக தவிர்த்துவிடுங்கள்)
பீட்ரூட் ஜூஸ்
இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் நிறைந்ததுதான் இந்த பீட். துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொண்ட பீட்ரூட்டுடன், எலுமிச்சை, உப்பு, பனங் கல்கண்டு, இஞ்சி துண்டு, தேவையான அளவு தண்ணீர் கலந்து அரைத்து வடிகட்டி ஐஸ் கலந்து பரிமாறலாம். (வடிகட்டிய சக்கையைக்கூட வீசாமல் முகத்திற்கு பூசிக்கொள்ளலாம்)
காரட் ஆரஞ்சு ஜூஸ்
நன்கு சுத்தப்படுத்தி துண்டுகளாக வெட்டிக்கொள்ளப்பட்ட கேரட்டுடன், ஆரஞ்சுப் பழங்களை முழுமையாக விதைகளை நீக்கிவிட்டு (விதைகள் கசப்பு தன்மையை கொடுக்கக்கூடியவை என்பதால் அதனை நீக்கிவிடுவது அவசியம்) சேர்த்து தண்ணீர் கலந்து நன்றாக மிக்சியில் அடித்தெடுத்து தேன் அல்லது சிவப்பு சீனி கலந்து அருந்தலாம்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காயை தோலினை சீவி சுத்தப்படுத்தி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு,சிறிய துண்டு இஞ்சி, எலுமிச்சை சாறு , நான்கைந்து புதினா இலைகள் எலுமிச்சை சாறு, கொஞ்சம் மிளகுத்தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து வடிகட்டி அருந்தலாம்!
எலுமிச்சை புதினா ஜூஸ்
வெறுமனே எலுமிச்சையினை மாத்திரம் பிழிந்து அருந்தாமல், எலுமிச்சை புதினா கைப்பிடியளவு, சிறிய துண்டு இஞ்சி, சர்க்கரை, கொஞ்சம் மிளகுத்தூள் கலந்து அரைத்தெடுத்து வடிகட்டி ஐஸ் கட்டிகளை இட்டு குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அதிகப்படியாக வழங்கும்.
இஞ்சியின் காரமும், எலுமிச்சையின் புளிப்பும் ஒரு புதுவிதமான புதுமையான சுவையினை தரக்கூடியது. மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றதாம். இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால்தான் நாம் எந்த ஜூஸ் வகைகளை செய்யும்போதும் சுவைக்காக மட்டுமன்றி ஆரோக்கியத்திற்காகவும் அதில் கொஞ்சம் எலுமிச்சையினை கலந்துவிடுகின்றோம்.
-ப்ரியா ராமநாதன்