2022 Sep 5
மீண்டும் 300/= ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாணின் விலை! கொஞ்சம் சலசலத்த மக்கள் இரண்டு நாட்களில் தானாகவே வேறு விலையேற்றம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த பாண் விலையேற்றம் என்பது உலக அளவில் எத்தனை போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது தெரியுமா?
பாண் தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் பல வரலாறுகளை திருத்தி எழுதியிருக்கிறது. பல வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு தீர்க்கமான சாட்சியாக இருந்திருக்கின்றது. பாண் எப்போதுமே உழைக்கும் மக்களின் உணவாகவும் அவர்களின் அடையாளமாகவும் உலக வரலாற்றில் இருந்திருக்கின்றது. வடிவங்களில் வேறுபட்டிருந்தாலும் உலகம் முழுவதிலும் இந்த பாண் “பிரட்” எனும் பொதுப்பெயரால் எத்தனை புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கின்றது என்பது தெரியுமா?
1789இல் பிரான்சின் பிரெஞ் நகரத்தில் இதே ப்ரெட்டுக்காக பெண்கள் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்தனர். பிரென்ச் புரட்சியின் ஒரு முக்கியமான அடையாளமாக அந்த போராட்டம் கருதப்படுகின்றது. ப்ரெட்டின் விலையை எக்கச்சக்கமாக ஏற்றியதனைக் கண்டித்து பிரென்ச் அரசரை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் ஒன்றினை ஆரம்பித்தனர்.
வரலாற்றில் இந்த சம்பவமானது ” women’s march on Versailles” ” என வர்ணிக்கப்படுகின்றது. ஒரு சந்தையில் வைத்து மிகச்சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் கொஞ்சம்கொஞ்சமாக ஆண்கள் மற்றும் ஊர்வலத்தை அடக்க வந்த பிரென்ச் அரசருடைய படைகள் என பாராபட்சமின்றி இணைய ஆரம்பித்ததும் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது.
கைகளில் சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்தியை வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்த பெண்களால் போகிற வழியில் அரசருடைய ஆயுத கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டு அந்த ஆயுதங்களை வைத்தே பிரென்ச் மன்னரது அரண்மனை முற்றுகையிடப்பட்டது. மிக தீவிரமாக மாறிய அந்த போராட்டத்தின் இறுதியில் 11ம் லூயி மன்னருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு அரச குடும்பத்தினரது கையிலிருந்த அதிகாரம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
1863இல் அமெரிக்க சிவில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமேரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதனால் ப்ரெட்டின் விளையும் தாறுமாறாக உயர்ந்ததைக் கண்டித்து 1863 ஏப்ரல் 02ஆம் திகதி நூற்றுக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். அந்த போராட்டம் வன்முறையாக மாறி கடைசியில் ராணுவத்தால் நிலைமை சரிசெய்யப்பட்டது.
இவ்வளவு ஏன் 1977இல் இதே ப்ரட்டுக்காக மிகப்பெரிய போராட்டத்தினை சந்தித்தது எகிப்து. உலக வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் திணறிக்கொண்டிருந்த எகிப்து அரசிடம் “நீங்கள் ப்ரட்டுக்காக கொடுக்கும் மானியத்தினை நிறுத்திவிட்டு எங்களுக்கு கடனை திருப்பித் தாருங்கள் ” என உலக வங்கி கூற அதனை எகிப்து அரசும் அமுல்படுத்தியது. இதனை எதிர்த்து எகிப்து முழுவதிலும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் எழுபது பேர் மரணித்து சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பின்னர் உலக வங்கியும் எகிப்து அரசும் மீண்டும் மானியத்தை வழங்க ஒப்புக்கொண்டனர்.
முப்பது வருடங்களாக சூடானை சர்வாதிகாரமாக ஆட்சிசெய்துவந்த “Omar al Bashir” என்பவர் இதே பாணின் விலையேற்றத்தினாலேயே மிகப்பெரிய போராட்டத்தின் பின்னர் 2019இல் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார் சூடான் மக்களால்.
உலகப்போரில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக பாண் இருந்திருக்கின்றது. யுத்த வீரர்களுக்கே ப்ரட் சென்றுசேர வேண்டும் என்பதாலும் யுத்த செலவீனங்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசுகள் “குறைவாக பிரெட்டினை உண்ணுங்கள் அப்போதுதான் நம்மால் ஜெயிக்க முடியும்” என பிரச்சாரம் செய்தனராம்.
இவ்வளவு ஏன் நம் நாட்டில் 1994ஆம் ஆண்டு தன் தாயார் ஸ்ரீமா பண்டாரநாயக்கவினால் ஏற்பட்ட பாண் போராட்டத்திற்கு பிரதியுபகாரமாக, தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் இரண்டு ரூபாய்க்கு பாணை மக்களுக்கு தருவதாக கூறியே ஆட்சியை பிடித்தார் சந்திரிக்கா பண்டாரநாயக்கா.
இன்றும் உலகத்தில் கிட்டத்தட்ட 60% மக்களின் பிரதான உணவாக இருப்பது இந்த ப்ரட். உலகத்தின் வரலாற்றுப் பக்கங்களை எடுத்துப்பார்த்தோமானால் பல போராட்டங்களுக்கு இந்த ப்ரட் எனப்படும் பாண்தான் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கின்றது.