அறிவியலை நாடி வெற்றிலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வெற்றிலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?

2021 Feb 11

‘அங்கே பார்! அவனுடைய வாயால ரத்தம் சொட்டிக்கொண்டு இருக்கு’ அது தான் என்னுடைய ரஷ்ய நண்பர் முதல் முதலில் வெற்றிலை மெல்லும் ஒருவரை பார்த்த முதல் தருணம். இவை அனைத்தும் காலிக்கு ரயிலில் சென்றுகொண்டு இருக்கும்போது நடந்தமையினால் அதை பற்றி ஆழமான சிந்தனை மனதில் ஓடத்துவங்கியது.

ஆதி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இலங்கையில், அனைத்து விடயங்களுக்கும் ஒரு வகையான சுவாரஷ்யமான பின்னணி உண்டு, அதில் வெற்றிலை ஒரு விதிவிலக்கல்ல. சினிமாவில் சொல்வது போல் பெரும்பாலான இலங்கையர்களுக்கு வெற்றிலை மெல்லுதல் ‘அவங்க இரத்ததிலேயே ஊறிப்போன விடயம்’ என்று கூடச் சொல்லலாம். நாக தேவதையின் இராச்சியத்தில் வளர்க்கப்படும் தாவரமாக கருதப்படும் இத்தாவாரம், ஆதம் அடியவர்களின் உலகத்துக்கான வருகையின் பின், நாக உலகிலிருந்து இங்கு வரவழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மேலும் இவை நாகத்தின் பற்களினால் கௌவப்பட்டு கொண்டுவரப்பட்டதால் அவற்றின் காம்பு மற்றும் நுனிப்பகுதிகளில் விஷம் கலந்துள்ளதாக கருதி, மெல்லும் போது அவற்றை அகற்றி விடும் பழக்கத்தையும் எம்மவர்கள் கொண்டுள்ளனர்.

காமம்

முதன்முதலில் கேட்டபோது வேடிக்கையாக இருந்தது, ஆனால் இது காமத்தை தூண்டும் ஒரு சிறப்புப் பொருளாகவும் அறியப்படுகிறது. இதனால் தான் இந்து கலாச்சாரத்தில் புதுமணத் தம்பதியினர்களுக்கு வெற்றிலை தட்டு வழங்கி முதல் இரவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வலி நிவாரணி

‘ஆதி காலத்துப் பெனடோல்’ ஆக வெற்றிலை விளங்கியுள்ளது. குறிப்பாக வெட்டுக்காயம், உராய்வு மற்றும் தேமல் ஏற்பட்ட இடங்களுக்கு வெற்றிலையை அரைத்துப் பூசும் பழக்கம் இங்கு இருந்துள்ளது. வலி நிவாரணியாக மட்டுமல்லாது உடைவு, சுழுக்கு போன்ற என்புடன் சம்பந்தப்பட்ட முறிவுகளுக்கும் வெற்றிலையை அரைத்து பூசுவதோடு, இலையை வைத்து சுற்றிக் கட்டும் வழிமுறையை இலங்கையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் கூட கடைப்பிடித்திருக்கிறார்கள்.

அழகுசாதன பொருட்கள்

எங்களை சற்று ஆச்சரியப்படுத்திய ஓர் சிறப்பு. பெரும்பாலான அழகுசாதன பொருட்கள் வெற்றிலையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக பற்பசை மற்றும் சவர்க்காரம் போன்ற பொருட்கள் வெற்றிலையை மூலமாகக்கொண்டு செய்யப்படுகின்றன.

உற்சாகம்

கடைசியாக எம்மில் அதிகமானோர் வெற்றிலை மெல்லுவதற்கான காரணம், இதுவோர் உற்சாகம் வழங்கும் தாவரமாக விளங்குகின்றது. பொதுவாக வெற்றிலை பாக்குடன் உற்கொள்ளப்படுகின்றமையினால் அதிகளவான இரசாயனக்கலவையின் தாக்கத்தினால் புதியதோர் உற்சாகத்தோடு, நிம்மதியான, மகிழ்ச்சியான மனநிலையையும் கொடுக்கின்றது. சுருக்கமாக சொன்னால் ‘இதுல ஏதோ ஒரு கிக் இருக்கு’.

கசப்பான உண்மை

வெற்றிலை மெல்லுவதால் எவ்வகையான பாதிப்பும் கிடையாது என்பது விஞ்ஞானரீயாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகும். ஆயினும், வாய்புற்றுநோய் மாதிரியான நோய்கள் வெற்றிலையுடன் சேர்ந்து சுண்ணாம்பு மற்றும் பாக்கு உட்கொள்ளப்படுவதனால் ஏற்படும் பாரிய பிரதிபலன்களாகும். ஆகவே வெறுமனே வெற்றிலையை மட்டும் தனது தேவையின் அடிப்படையில் உற்கொள்வதனால் அதன் முழுமையான நன்மையை நாம் அடைந்து கொள்ளலாம்.

ரயில் பயணமும் ஒருமாதிரி நிறைவடைந்தது. ஹோட்டல் அறைக்குச் சென்றவுடன் விறுவிறுவென நடந்து, அங்கிருந்த சிகை அலங்கார பொருட்களைத் தேடி அதன் உள்ளடக்கத்தை பார்த்தோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php