2023 Mar 16
தற்காலத்தில் இறந்தவரின் உடலை துணியால் சுற்றி, பூமியில் குழிதோண்டி படுக்கவைத்து மண்ணிட்டு மூடுகிறார்கள் அல்லது அலங்கரிக்கப்பட்ட உடலை சவப்பெட்டியினுள் வைத்து அந்த சவப்பெட்டியுடனேயே மண்ணுக்குள் புதைத்துவிடுவார்கள். இச்செயலையே அடக்கம் செய்தல் எனப்படும்.
ஆனால் பழந்தமிழகத்தில் இறந்தவர்களை நேரடியாக மண்ணில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை.இறந்தவர்களை அதிலும் குறிப்பாக இறப்பு நேராமல் வயோதிக மிகுதியினால் முடங்கிப்போனவர்களை அடக்கம் செய்வதற்கு மண் பாண்டத்தைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இறந்தவர்களின் உடலை ஒரு பெரிய பானைக்குள் வைத்து, மண்ணுக்குள் அடக்கம் செய்தார்கள். இந்த வழக்கமே ‘முதுமக்கள் தாழி’ என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டது.
ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த தாழியானது ஏழடி உயரம் வரைக்கும் செய்யப்பட்டிருக்கும். இறப்பு நேராமலும், அசைவின்றியும் முடங்கிக்கிடந்த முதியவர்களை முதுமக்கள்தாழிகளில் அமரவைத்து மண்ணில் புதைக்கும் வழக்கம் பழந்தமிழர்களிடையே இருந்தது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப்பகுதிகளில் இம்முறை பரவாலாக பின்பற்றப்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
முதுமக்கள் தாழி முறையைப் பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. முதலாவதாக தாழியில் இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது. இம்முறையில் பானை பெரிய அளவினதாக இருக்கும்.
இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் இட்டுப் புதைக்கும் முறையாகும்.
முதுமக்கள் தாழியினுள் ஒரே நபரின் எலும்புக்கூடுகள் மட்டும் காணப்படுவதில்லை. கொடிய நோய்கள் போர்கள் போன்றவற்றால் ஒரே நேரத்தில் இறந்த பல நபர்களின் எலும்புக்கூடுகள்கூட ஒன்றாக புதைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஓரடி அளவிலான சிறு தாழிகள் இறந்த குழந்தைகளைப் புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதுடன் குறைமாதத்தில் இறந்த குழந்தைகளுக்காக “தொட்டில்பேழை” எனப்பட்ட தாழியும் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழர்கள் முதுமக்கள் தாழியில், இறந்த மனிதனின் உடலை சம்மணமிட்டு அமரவைத்து, கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினை எரியும் நிலையில் வைத்து பானையை மூடினர்.
தாழியைப் புதைத்த குழியானது மணல் இடப்பட்டு பாறையால் மூடப்பட்டதுடன் அப்பாறைமீது மணல் கொட்டி பாதி முட்டை வடிவம் போன்றுள்ள பாறை ஒன்றால் மூடப்பட்டது. பாறையைச்சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டன. கேரளத்தின் குடைக்கல், தொப்பிக்கல் போன்றவை இத்தகைய தாளிகளே எனக்கூறப்படுகின்றது. இவற்றிலெல்லாம் தாழிகள் இருப்பதை மேலே உள்ள கற்சின்னங்கள் உணர்த்துவனவாக இருக்கின்றனவாம்.
முதுமக்கள் தாழி குறித்து, புறநானூற்றின் 228ம் பாடல் முழுமையாகக் கூறுகிறது. “குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்” என்னும் சோழ மன்னன் போரில் இறந்தபோது, ஐயூர் முடவனார் என்னும் புலவர் முதுமக்கள்தாழி செய்வதைத் தொழிலாகக் கொண்ட ‘மூதூர்க் கலஞ்செய் கோ’ என்பவரிடம் “எம் மன்னனின் பெருமைக்கேற்ற முதுமக்கள் தாழியை நீ செய்துவிட முடியுமோ?” என்னும் பொருளில் அமைந்த பாடலொன்றைப் பாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-ப்ரியா ராமநாதன்